குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

மதுரையில் குடிநீர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-08-10 22:45 GMT
மதுரை,

மதுரை நகரில் தற்போது மாநகராட்சி சார்பில் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சில பகுதிகளில் வெகுநாட்களாக தண்ணீர் வரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இந்தநிலையில் பெரியார் பஸ்நிலையம் அருகே உள்ள காஜிமார் தெரு, ஜரிகைக்காரத் தெரு, தெற்குமாசி வீதி என அந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவியாய் தவித்து வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் தெற்கு மாரட் வீதிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி போலீஸ் கமிஷனர் வெற்றிச்செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதானம் பேசினர். மேலும் மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உடனே குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியல் செய்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்