50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்க நடவடிக்கை கலெக்டர் தகவல்

50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-08-11 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பா நெல் சாகுபடியானது, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் 2 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கரிலும், தாளடி சாகுபடி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 92 ஆயிரம் ஏக்கரிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சம்பா சாகுபடி 1 லட்சத்து 57 ஆயிரம் ஏக்கரில் நேரடி விதைப்பின் மூலம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது கபினி அணையில் இருந்து காவிரிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடி பணி உடனடியாக தொடங்கி கோடை உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்யலாம். மேலும் நாற்று நடவு செய்வதற்கு நாற்றங்கால் தயார் செய்து கொள்ளலாம்.

விதை நெல்

இதற்கு தேவையான விதை நெல் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விதை நேர்த்தி செய்திட உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்து உரங்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, நாகை மாவட்ட விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சம்பா, தாளடி சாகுபடியை நல்லமுறையில் செய்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்