திருச்சிற்றம்பலம் அருகே மொபட்-கார் மோதல்; விவசாயி பலி மொய் விருந்து அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது பரிதாபம்

திருச்சிற்றம்பலம் அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார். மொய் விருந்து அழைப்பிதழ் கொடுக்க சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்தது.

Update: 2019-08-12 22:15 GMT
திருச்சிற்றம்பலம்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா குளமங்கலம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கன்னு(வயது 56). விவசாயி. இவர் மொய்விருந்து விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். சம்பவத்தன்று தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள சித்துக்காடு மற்றும் பொக்கன்விடுதி கிராமங்களில் உள்ள தனது உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க குளமங்கலம் வடக்கு கிராமத்தில் இருந்து ஒரு மொபட்டில் திருச்சிற்றம்பலத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

திருச்சிற்றம்பலம்-ஆவணம் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே அவர் சென்றபோது பின்னால் வந்த கார், மொபட் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் தவறி விழுந்து படுகாயம் அடைந்த சின்னக்கன்னுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இறந்த சின்னக்கன்னுவிற்கு வள்ளி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறந்தாங்கியை சேர்ந்த கார் உரிமையாளர் ஆத்மநாதன் என்பவரை தேடி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்