சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் - போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்

சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2019-08-12 22:19 GMT
சேலம்,

சேலம் மாநகர போலீஸ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூக பாதுகாப்புத்துறை, சைல்டுலைன் அமைப்பு ஆகியவை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு, மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் குழந்தைகளை வீட்டிலோ, வாகனங்களிலோ தனியாக விடக்கூடாது. பள்ளிக்கு சென்ற பிள்ளைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்பவில்லை என்றால் உடனே தேட வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் தின்பண்டங்களை குழந்தைகள் வாங்கி சாப்பிடக்கூடாது. குழந்தைகளை மற்றவர்கள் மூலம் பள்ளிக்கு அனுப்பக்கூடாது. அதே போன்று அறிமுகம் இல்லாதவர்களுடன் மாணவ, மாணவிகள் செல்ல பள்ளி நிர்வாகம் அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை வழியாக சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்