மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்து: தனியார் பஸ் மோதி மூதாட்டி பலி

மேடவாக்கத்தில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மூதாட்டி தவறி விழுந்ததில், பஸ் மோதி பரிதாபமாக பலியானார்.

Update: 2019-08-13 21:45 GMT
ஆலந்தூர்,

தாம்பரம் விமானப்படை குடியிருப்பை சேர்ந்தவர் சஞ்சய் குமார் சிங் (வயது 52). இவர் விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சஞ்சய் நேற்று முன்தினம் தனது தாயார் கைலாஷ் தேவி (80) என்பவரை மோட்டார் சைக்கிளில் மேடவாக்கம் அழைத்துச் சென்றார்.

பின்னர் மேடவாக்கம்-வேளச்சேரி மெயின் சாலை வழியாக வீடு திரும்பி கொண்டிருந்தார். மேடவாக்கம் அருகே வரும்போது, பின்னால் உட்கார்ந்திருந்த கைலாஷ்தேவி திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அப்போது அங்கு பின்னால் வந்த தனியார் பஸ் ஒன்று கைலாஷ்தேவி மீது ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிருக்கு போராடினார்.

உடனே அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தாம்பரம் விமானப்படை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கைலாஷ்தேவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்