பனப்பாக்கத்தில் வாகனம் மோதி முதியவர் பலி - போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு

பனப்பாக்கத்தில் வாகனம் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார். போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-08-15 21:45 GMT
பனப்பாக்கம், 

பனப்பாக்கம் வேளாளர் வீதியை சேர்ந்தவர் மணி (வயது 80), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள அருந்ததிபாளையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மணியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு செல்லாமல் மணியின் உடலை பனப்பாக்கத்துக்கு எடுத்து வந்து விட்டனர். பின்னர் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நெமிலி போலீசார் விரைந்து வந்து மணியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்