விக்கிரவாண்டி அருகே, விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விக்கிரவாண்டி அருகே விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-16 22:00 GMT
விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி அருகே உள்ள வடகுச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 55), விவசாயி. இவர் நேற்று முன்தினம் வேலை காரணமாக வெளியூருக்கு சென்று விட்டார். வீட்டில் திருநாவுக்கரசுவின் மனைவி மனைவி அம்பிகா (52), மகள் மாலதி (24), மகன் கோகுலகிருஷ்ணன் (20), மாலதியின் குழந்தை செங்கதிர்செல்வன் ஆகியோர் மட்டும் இருந்தனர்.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு வீட்டில் படுத்து தூங்கினர். அப்போது வீட்டிற்குள் புழுக்கம் அதிகமாக இருந்ததால் காற்றுக்காக கதவை திறந்து வைத்தபடி தூங்கியுள்ளனர்.

இதனிடையே நேற்று அதிகாலை 4 மணிக்கு அம்பிகா, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பைகள் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை காணவில்லை.

உடனே வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தபோது பின்புற பகுதியில் பைகளில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தது. அதிலிருந்த 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் மடிக்கணினி ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ, வீட்டிற்குள் புகுந்து நகை, பணம் மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர் களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்