பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் சர்க்கரை திருப்பாவாடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-08-17 22:30 GMT
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் வட்டம், பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சதுரங்கவல்லபநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது. கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்போல் சாமுண்டீஸ்வரி அம்மன் இந்த கோவிலில் தான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை தோறும் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியில் எலிக்கடி போன்ற விஷக்கடிகளுக்கு வேர் கட்டப்பட்டு வருகிறது.

பல்வேறு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டும் தோறும் சர்க்கரை திருப்பாவாடை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி, சதுரங்கவல்லபநாதர், சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.

சர்க்கரை திருப்பாவாடை விழா

இதனைத்தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியில் சர்க்கரை திருப்பாவாடை விழா நடந்தது. சாமுண்டீஸ்வரி அம்மன் வெள்ளிக்கவச அலங்காரத்தில் எழுந்தருள அம்மன் சன்னதியின் முன்பு சர்க்கரை பொங்கல் படையலிட்டு அதில் நெய் நிரப்பி வழிபாடு செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கீதா, செயல்அலுவலர் அரவிந்தன் மற்றும் பிரதோஷ கமிட்டியினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்