அமைச்சர் மகன் வீட்டில் நகை, பணம் திருடிய 3 பேர் கைது

திண்டுக்கல்லில், அமைச்சர் மகன் வீட்டில் 50 பவுன் நகை, பணத்தை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-17 23:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் வசிப்பவர் வெங்கடேசன். இவர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகன் ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 23-ந்தேதி இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவருடைய வீட்டுக் குள் புகுந்து வீட்டில் இருந்த 50 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை திருடிச்சென்றுவிட்டனர்.

இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக, வெங்கடேசன் வீட்டருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆனால் அதில் எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து திருட்டு வழக்கில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் பட்டியலை சேகரித்து விசாரித்தனர்.

இருப்பினும் துப்புத்துலங்காமல் மர்மம் நீடித்தது. இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேஷ், வீரபாண்டி, நல்லதம்பி, ஏட்டு ஜார்ஜ் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வெங்கடேசனின் உறவினர்கள், அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்பவர்கள், அவருடைய வீட்டில் வேலை பார்ப்பவர்கள், அக்கம்பக்கத்தினர் என்று அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது வெங்கடேசனிடம் கார் டிரைவராக வேலை பார்த்த திண்டுக்கல் பெரியபள்ளப்பட்டியை சேர்ந்த பாண்டி (வயது 39) என்பவர் சமீபத்தில் வேலையில் நீக்கம் செய்யப்பட்டதும், திருட்டு சம்பவம் நடந்த அன்று வெங்கடேசன் வீட்டருகே, 2 பேருடன் பாண்டி சுற்றித்திரிந்ததும் தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து நேற்று அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

ஆனால் திருட்டு சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறினார். அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து துருவி, துருவி விசாரித்தனர். அப்போது தனது நண்பர்களான வினோத்குமார் (30), ரவிக்குமார் (29) ஆகியோருடன் சேர்ந்து வெங்கடேசன் வீட்டில் நகை, பணத்தை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் மற்ற 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்