10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வ இளைஞர்கள் பராமரிப்பு பணியில் தீவிர கவனம் செலுத்த முடிவு

பல்லவராயன்பத்தை ஊராட்சியில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியில் தன்னார்வ இளைஞர்கள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். பராமரிப்பு பணியில் கவனம் செலுத்த தனிக்குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-08-18 22:30 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா மரங்கள் அடர்ந்த பகுதியாகும். சாலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்கள், பல்வேறு வகையான மரத்தோப்புகள், வனபகுதிகள் போன்றவை கறம்பக்குடி பகுதியை இயற்கை எழில் கொஞ்சும் பசுமை பகுதியாக வைத்திருந்தது. இவை அனைத்தும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வீசிய கஜா புயலின் கோர தாக்குதலில் காணமால் போயின. ஒரே நாள் இரவில் வெட்ட வெளியாகி போன கறம்பக்குடியின் நிலை கண்டு அனைவரும் கலங்கி போயினர்.

இருப்பினும் முயன்றால் முடியாது ஏதும் இல்லை என்பதற்கு சான்றாக பொதுமக்களே தங்கள் வீடுகள், வயல் வெளியில் தோட்டங்கள் போன்ற பகுதிகளில் மீண்டும் மரக்கன்றுகளை நட்டு அவை வளர்த்து நிற்கின்றன. இருப்பினும் சாலையோரங்களிலும், பொது இடங்களிலும், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் மரங்களை உருவாக்கும் பணியில் பல்வேறு அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

பாராட்டு

இதன்படி கறம்பக்குடி அருகே உள்ள பல்லவராயன்பத்தை ஊராட்சியில் காடுகளை உருவாக்குவோம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தன்னார்வ இளைஞர்களை கொண்ட இந்த அமைப்பின் சார்பில், முதல் கட்ட முயற்சியாக பல்லவரான்பத்தை ஊராட்சியில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணி தொடங்கியது.

முதல்கட்டமாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உதவியுடன் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதேபோல் ஊராட்சி சாலையோரங்களில் கூண்டுகளுடன் கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்த பணி சம்பிரதாய நடைமுறையாக இருக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ள இளைஞர்கள், மரக்கன்றுகளை தொடர்ந்து பராமரித்து வளர்ப்பதற்கான தனிக்குழுக்களையும் அமைத்துள்ளனர். இழந்து விட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும் மரம் வளர்ப்பு பணியில் தங்களின் பங்களிப்பை முழுமையாக செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர். 

மேலும் செய்திகள்