சேலத்தில், மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது - 162 பாட்டில்கள் பறிமுதல்

சேலத்தில் மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 162 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-08-19 22:45 GMT
சேலம்,

சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் சேலம் பழைய பஸ் நிலையப்பகுதியில் உள்ள ஒரு கார் நிறுத்தும் இடத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு ஒருவர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் சேலம் வீராணம் மணக்காடு பகுதியை சேர்ந்த ரவி (வயது 54) என்பதும் அவர் மதுபதுக்கி விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 130 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதே போன்று சேலம் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் அழகாபுரம் பறவை காடு மாரியம்மன் கோவில் பகுதியில் சோதனை நடத்தினார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த அலமேலு (48) என்ற பெண் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.

அதே போன்று கருப்பூர் பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வி.அலமேலு (50) என்ற பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதன்படி ஒரே நாளில் மது விற்பனை செய்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தம் 162 பாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மேலும் செய்திகள்