தாழக்குடி கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிர் குழுக்கள், விவசாயிகளுக்கு ரூ.82 லட்சம் கடனுதவி தளவாய்சுந்தரம் வழங்கினார்

தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.82 லட்சம் கடனுதவியை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வழங்கினார்.

Update: 2019-08-19 22:45 GMT
ஆரல்வாய்மொழி,

தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க புதிய நிர்வாக குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா மற்றும் விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் நாகரத்தினம் வரவேற்று பேசினார்.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்து கொண்டு புதிய நிர்வாக குழு உறுப்பினர்களை பாராட்டினார். தொடர்ந்து விவசாயிகளுக்கும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கும் ரூ.82 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது:-

கடுமையான சட்டம்

கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் தவறுகள் நேராத வண்ணம் மிகவும் கவனமாக செயலாற்ற வேண்டும். தவறுகள் நடக்கும் பட்சத்தில் சட்டத்திற்கு உட்பட்டு இன்னல்களை அனுபவிக்க நேரிடும்.

தாழக்குடி கூட்டுறவு கடன் சங்கமானது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அளவில் கடனுதவிகளை வழங்கி வருகிறது. அடுத்த ஆண்டு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடனுதவி வழங்குவதில் மாநிலத்தில் முதல் மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ வேண்டும். கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கி அனைவரும் இணைந்து செயல்பட்டால் இந்த இலக்கை அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில், மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம், குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் சுப்பையா, மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் ராஜன், நாகர்கோவில் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் சங்கரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார் (ஆரல்வாய்மொழி), பிரம்மநாயகம் (தாழக்குடி), அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் லதா ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்