பெண்ணை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரித்து வந்த நிலையில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை

பல்லடம் அருகே பெண்ணை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரித்து வந்த நிலையில் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-08-20 23:30 GMT
பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள ராயபாளையம் மகாலட்சுமி நகர் 6–வது வீதியை சேர்ந்தவர் இம்மானுவேல் (வயது 30). இவருடைய மனைவி சுகன்யா (25). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக சுகன்யா தனது கணவரை விட்டு பிரிந்து திருப்பூரில் உள்ள தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்ற சுகன்யா மாலையில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவருடைய பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் கடந்த 1–ந் தேதி பல்லடம் அருகே பெத்தாம்பாளையம் காட்டுப்பகுதியில் 25 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரித்த போது அந்த பெண் சுகன்யா என்று தெரியவந்தது.

இதையடுத்து பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் சம்பத்தன்று பல்லடம்– பெத்தாம்பாளையம் பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் சுகன்யாவை யாரும் கடத்தி செல்லும் வீடியோ பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது சுகன்யாவை, அவருடைய கணவர் இம்மானுவேல், ஸ்கூட்டரில் அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார், இம்மானுவேல் குடியிருந்த மகாலட்சுமி நகரில் உள்ள வாடகை வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது வீடு பூட்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பூட்டப்பட்ட வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசுவதாக வீட்டின் உரிமையாளர் பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டிற்குள் இம்மானுவேல் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை போலீசார் மீட்டு பல்லடம் அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

சம்பவத்தன்று சுகன்யாவை கொலை செய்தது யார்? என்று போலீசார் விசாரித்து வந்த நிலையில், இம்மானுவேல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்