காட்டாற்று பாலத்தில் ஓ.என்.ஜி.சி. கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கக்கோரி சாலை மறியல்

கொரடாச்சேரி அருகே காட்டாற்று பாலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2019-08-20 22:15 GMT
கொரடாச்சேரி,

கொரடாச்சேரி அருகே உள்ள தாழைக்குடியில் காட்டாற்று பாலம் உள்ளது. பழமையான இந்த பாலம் மக்களின் போக்குவரத்துக்கான ஒரே வழியாக உள்ளது. தாழைக்குடி அருகில் நீலனூர், செட்டிசிமிழி, பெருமாளகரம் உள்ளிட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகள் உள்ளன. செட்டிசிமிழியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. ஓ.என்.ஜி.சி.யின் இடங்களுக்கு கனரக வாகனங்கள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.

தற்போது ஒரு சில நாட்களாக மழை பெய்து வருவதாலும், கல்லணை திறந்து விடப்பட்டதால் தண்ணீர் இந்த ஆற்றில் செல்லும் என்பதாலும், இந்தநிலையில் கனரக வாகனங்கள் இந்த பாலத்தின் வழியே சென்றால் பாலம் பழுது அடையலாம் என அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். எனவே இந்த வழியாக ஓ.என்.ஜி.சி.க்கு செல்லும் கனரக வாகனங்களை செல்ல அனுமதிக்கக்கூடாது என அந்தபகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படாததால் அந்தபகுதி மக்கள் சிலர் திரண்டு நேற்று தாழைக்குடி காட்டாற்று பாலம் அருகில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

28 பேர் மீது வழக்குப்பதிவு

போராட்டத்திற்கு தாழைக்குடி அ.தி.மு.க. கிளை செயலாளர் செல்லையன் தலைமை தாங்கினார். இதில் அதே ஊரை சேர்ந்த அறிவழகன், கோபி, மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர்.

இதனை தொடர்ந்து கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின்சிசாரா கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீசார் தாழைக்குடியை சேர்ந்த செல்லையன், அறிவழகன், மோகன், கோபி உள்பட 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்