பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2019-08-20 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நாகை மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தியாகராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் வேல்கண்ணன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோதிமணி, நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் பணி ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.

பதவி உயர்வு

7 ஆண்டுகள் பணி முடித்த பணி மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும் இளநிலை பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அவர்கள் பதவிக்கு கணக்கு தேர்வுக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில் மாவட்ட இணை செயலாளர்கள் பாஸ்கரன், சாமி, மனோகரன், வெங்கடேசன், மாவட்ட தணிக்கையாளர்கள் தங்கராசு, மாரி, தெட்சணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்