நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு வாடகை தொகை வழங்கக்கோரி கார், வேன் டிரைவர்கள் தர்ணா போராட்டம்

சீர்காழியில், நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு வாடகை தொகை வழங்கக்கோரி கார், வேன் டிரைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2019-08-20 23:00 GMT
சீர்காழி,

நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் ஒப்பந்த அடிப்படையில் சீர்காழி பகுதியில் இருந்து 7-க்கும் மேற்பட்ட தனியார் கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தேர்தல் முடிந்து 3 மாதங்களாகியும் தற்போது வரை வாகனங்களுக்கு வாடகை தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கார், வேன் டிரைவர்கள், கடந்த மாதம் நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணி உள்ளிட்டோருக்கு வாடகை தொகை வழங்கக்கோரி மனு அனுப்பினர். அதன்பின்னரும் வாடகை தொகை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டதற்கு உடனே வாடகை தொகையை வழங்கக்கோரி கார், வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நேற்று சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தாலுகா அலுவலக அலுவலர்கள், போராட்டக்காரர்களிடம் விரைவில் வாடகைத்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் தாலுகா அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்