பரமக்குடியில் கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: தொழில் அதிபர்- மகள்கள் உள்பட 4 பேர் பலி

கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் ராமநாதபுரம் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-08-20 23:15 GMT
பரமக்குடி,

ராமநாதபுரம் அருகே உள்ள சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்தவர் உஸ்மான் அலி (வயது 57). தொழில் அதிபர். இவருக்கு ராமநாதபுரத்தில் தொழில் நிறுவனங்கள் உள்ளன. உஸ்மான் அலி, அவருடைய மகள்கள் ஐனுல்(35), தஸ்லிமா(37), ஐனுலின் கணவர் கசாலி(40) ஆகிய 4 பேரும் மலேசியாவில் குடியுரிமை பெற்றவர்கள். அங்கு ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் நேற்று மலேசியாவில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு வந்தனர்.

அவர்களை அழைத்து வருவதற்காக ராமநாதபுரத்தில் இருந்து டிரைவர் செந்தில்குமார் என்பவர் காரில் மதுரைக்கு வந்தார். பின்னர் 4 பேரையும் மதுரை விமான நிலையத்தில் இருந்து அழைத்துக் கொண்டு சாத்தான்குளத்திற்கு காரில் புறப்பட்டார்.

அந்த கார் பரமக்குடி அருகே உள்ள பொதுவக்குடி நான்கு வழிச்சாலையில் வந்தபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மணிநகரைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சங்கர் (54) சாலையை கடக்க முயன்றார். இதில் மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் சங்கர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் மோதிய வேகத்தில் கார் நிலை தடுமாறி, சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த உஸ்மான் அலி மற்றும் அவருடைய மகள்கள் கார் இடிபாடுகளுக்குள் சிக்கி, பலத்த காயங்களுடன் பரிதாபமாக இறந்தனர். கசாலி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இந்த கோர விபத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே எமனேசுவரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். கசாலி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காரில் உடல் நசுங்கி பலியான 3 பேரின் உடல்கள் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன், காரின் ஒரு பகுதியை உடைத்து மீட்கப்பட்டு, பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கார் டிரைவர் செந்தில்குமார் காயமின்றி தப்பினார்.

விபத்தில் இறந்த தொழில் அதிபர் உஸ்மான் அலிக்கு பரக்கத் நிஷா என்ற மனைவியும், 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இவர் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் உணவகங்கள் நடத்தி வருகிறார். இவருக்கு ராமநாதபுரத்தில் ஒரு திருமண மகால் உள்ளது. ஆஸ்பத்திரியின் இயக்குனராகவும் உள்ளார். மலேசியாவில் தங்கியிருந்து தொழில் செய்யக்கூடிய இவர், சொந்த ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவ்வப்போது குடும்பத்தினருடன் வருவார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊருக்கு வரும் போது கார் கவிழ்ந்ததில் உஸ்மான்அலி படுகாயங்களுடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து எமனேசுவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழில் அதிபர், அவருடைய 2 மகள்கள் உள்பட 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்