திருவள்ளூர் அருகே கத்திமுனையில் கடைக்காரரிடம் பணம் பறிப்பு; 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே கத்திமுனையில் கடைக்காரரிடம் பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-08-21 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசையை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 34). இவர் மடவிளாகம் பகுதியில் காயலான் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவகுமார் கடையில் இருந்தபோது அங்கு வந்த புளியந்தோப்பை சேர்ந்த ஐசக் என்கிற தேவன்(32) குத்தம்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (28) ஆகியோர் சிவகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இதற்கு அவர் பணம் தர மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அந்த கடையில் இருந்த பொருட் களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திவிட்டு சிவகுமாரை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 500-ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து அவர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் ஐசக், லோகேஷ் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்