8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2019-08-22 23:15 GMT
திருவள்ளூர்,

சென்னை பட்டாபிராம் அன்னம்பேடு பகுதியில் தனியார் செங்கல் சூளை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 20) தங்கி செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவருடன் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரளானோர் தங்கி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 20-2-2018 அன்று கிருஷ்ணன் அந்த செங்கல் சூளையில் உள்ள தனது அறையில் தூங்கி கொண்டிருந்த 8 வயதான 4-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் சிறுமியை மிரட்டியும் உள்ளார்.

இது குறித்து சிறுமியின் தாயார் ஆவடியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபாராணி வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தார். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. மேலும் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக தனலட்சுமி வாதாடினார். வழக்கை விசாரித்த மாவட்ட மகளிர் கோர்ட்டு நீதிபதி பரணிதரன் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து தொழிலாளி கிருஷ்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.7 ஆயிரத்து 500-ம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகை செலுத்த தவறினால் மேலும் 18 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் இந்த தண்டனைகளை அவர் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் கிருஷ்ணனை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்