ஓட்டப்பிடாரம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-08-22 21:45 GMT
ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 55). டிராக்டர் டிரைவர். இவருடைய மனைவி பாப்பா. இவர்களுக்கு 2 மகன்கள். அதில் 2-வது மகன் முருகேசன் (27). இவர் தூத்துக்குடியில் உள்ள அனல்மின்நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம் (செப்டம்பர்) 16-ந்தேதி திருமணம் நடப்பதாக இருந்தது.

இந்த நிலையில் பெண் வீட்டார் திருமணத்தை சிறிது காலம் தள்ளி வைக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த முருகேசன் கடந்த 19-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அன்று முதல் பாலசுப்பிரமணியன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று மதியம் அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மகன் இறந்த துக்கத்தில் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்