கடன் பிரச்சினையால் தொழிலாளி, தூக்குப்போட்டு தற்கொலை - நெல்லிக்குப்பம் அருகே பரிதாபம்

நெல்லிக்குப்பம் அருகே கடன் பிரச்சினையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-23 22:30 GMT
நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே உள்ள கொங்கராயனூரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 55), தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ரகுமான் என்பவரிடம் கடனாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரகுமான் பணத்தை திருப்பி தருமாறு தங்கராசிடம் கேட்டு வந்தார். அதற்கு தங்கராசு தற்போது தன்னிடம் பணம் இல்லை எனக்கூறி காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடனாக வாங்கிய பணத்தை கொடுக்க முடியாததால் கடந்த சில நாட்களாக தங்கராசு மன வேதனையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தற்கொலை செய்து கொண்ட தங்கராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்