சுவர் மீது கார் மோதி விபத்து, கல்லூரி மாணவர் பரிதாப சாவு - நண்பர் படுகாயம்

கோவையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய நண்பர் படுகாயமடைந்தார்.

Update: 2019-08-23 23:15 GMT
பீளமேடு,

கோவை பீளமேடு புதூரை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிடித்து வந்தார். இவருடைய நண்பர்கள் சிலர் அந்த பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களின் அறைக்கு விஷ்ணு சென்றதாக தெரிகிறது.

இதை தொடர்ந்து நேற்று அதிகாலை தனது நண்பர்களான ராமேஸ்வரத்தை சேர்ந்த மணிகண்டன், கோவையை சேர்ந்த அருண் பிரசாத் ஆகியோருடன் கார்களில் காந்திபுரத்துக்கு டீ குடிக்க சென்றனர். பின்னர் கார்களில் அவர்கள் பீளமேட்டிற்கு திரும்பினார்கள். இதில் ஒரு காரை விஷ்ணு ஓட்டினார். அவருடன் மணிகண்டன் இருந்தார். மற்றொரு காரில் அருண்பிரசாத் வந்தார். விஷ்ணு ஓட்டி வந்த கார் நவ இந்தியா சிக்னல் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள ஓட்டலின் சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இதில் காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் விஷ்ணு இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் பீளமேடு போலீசார் மற்றும் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுவரில் சிக்கி இருந்த காரை பொக்லைன் எந்திரம் மூலம் வெளியே எடுத்தனர். பின்னர் கல்லூரி மாணவர் விஷ்ணுவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்