ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

ராமேசுவரம் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-08-23 23:15 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க கூட்டம் என்.ஜே.போஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மீனவர் சங்க தலைவர்கள் ஜேசு, எமரிட், சகாயம், சந்தியாகு, தட்சிணாமூர்த்தி உள்பட ஏராளமனோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் பிடிபட்டுள்ள தமிழக விசைப்படகுகளை அரசுடைமையாக்குவது தடுக்கப்பட வேண்டும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காரல், சூடை, சாளை ஆகிய மீன்கள் கோழித்தீவனங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த சம்பந்தப்பட்ட கம்பெனிகளிடம் அரசு வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கம்பெனிகள் மீன்களை கொள்முதல் செய்ய முன்வராமல் மூடிவிட்டனர். எனவே இதுபோன்ற நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது எனவும், வருகிற 29-ந்தேதி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஊர்வலமாக சென்று ரெயில் நிலையத்தில் மாலை 4 மணிக்கு ரெயில் மறியலில் ஈடுபடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தொடர்ந்து, மீனவர்கள் நேற்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்