மணவாளக்குறிச்சியில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி நிழற்குடைக்குள் புகுந்தது பயணிகள் அலறியடித்து ஓட்டம்

மணவாளக்குறிச்சியில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி நிழற்குடைக்குள் புகுந்தது பயணிகள் அலறியடித்து ஓட்டம்.

Update: 2019-08-25 22:45 GMT
மணவாளக்குறிச்சி,

அம்மாண்டிவிளை பகுதியில் இருந்து மண்டைக்காடு நோக்கி ஜல்லி ஏற்றிக்கொண்டு நேற்று மாலை டிப்பர் லாரி சென்றது. சாத்தன்விளை இறக்கத்தில் வந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் டிப்பர் லாரி தாறுமாறாக ஓடியது. இந்தநிலையில் மணவாளக்குறிச்சி வள்ளியாற்று பாலம் அருகில் உள்ள பயணிகள் நிழற்குடை மீது டிப்பர் லாரி மோதி நின்று விட்டது.

இதனை கவனித்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே டிப்பர் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. டிப்பர் லாரி மோதியதில் நிழற்குடை சேதமடைந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் டிப்பர் லாரி யாருடையது? தப்பி ஓடிய டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி பயணிகள் நிழற்குடைக்குள் புகுந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்