காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை

கன்னியாகுமரி அருகே காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2019-08-26 23:15 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்த தாணுமூர்த்தி மகன் முருகன் (வயது 24). இவர் விவேகானந்தர் மண்டபத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தனது மாமன் மகள் சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முருகன் கடந்த சில தினங்களாக நோயால் அவதியடைந்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை எனத்தெரிகிறது. இதனால், மனமுடைந்த முருகன் மது பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முருகன், தனது மனைவி சினேகாவை பெரியார்நகரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சினேகாவை விட்டுவிட்டு, திரும்பி வந்த அவர் இரவு வழக்கம்போல் அறையில் தூங்க சென்றார்.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, முருகன் மின் விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இதுகுறித்து கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்த 8-வது மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்