தலைமை ஆசிரியை வீட்டில் நகை-பணம் திருடிய மாணவன் போலீசார் கைது செய்தனர்

வடுவூரில், தான் தங்கி படித்த தலைமை ஆசிரியை வீட்டிலேயே நகை மற்றும் பணம் திருடிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-27 22:15 GMT
வடுவூர்,

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள வடுவூர் தென்பாதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், காண்டிராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயா(வயது 52).

இவர், வடுவூர் வடபாதி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள், தங்களது வீட்டில் 9-ம் வகுப்பு படிக்கும் உறவினர் சிறுவன் ஒருவனை தங்க வைத்து பள்ளியில் படிக்க வைத்தனர். மேலும் அவனை தங்களது மகன்போல வளர்த்து வந்தனர்.

நகை-பணம் திருட்டு

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ஜெயா தனது வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு இருப்பதையும், பொருட்கள் கலைந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் இருந்த ரூ.2½ லட்சம் மற்றும் 5 பவுன் நகையை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வடுவூர் போலீசில் ஜெயா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு மன்னார்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கைது

அப்போது அவர்களது வீட்டில் தங்கி இருந்த 14 வயது சிறுவனிடம் விசாரணை செய்தனர். விசாரணையின்போது அந்த சிறுவன் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தான். இதனையடுத்து அந்த சிறுவனை அவனது சொந்த வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது அந்த சிறுவன், தான் நகை மற்றும் பணம் திருடியதை ஒப்புக்கொண்டான். இதனையடுத்து அவன் அங்கு மறைத்து வைத்திருந்த நகை மற்றும் பணத்தை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவனை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்