திருச்செந்தூர் அருகே பரிதாபம்: திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்செந்தூர் அருகே திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக தாயார் போலீசாரிடம் புகார் அளித்தார்.

Update: 2019-08-27 22:30 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே கீழ நாலுமூலைக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் புலமாடன். இவருடைய மகன் பிரபாகரன் (வயது 29). இவர் உடன்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினம் செந்தில் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகள் ஆஷா (24). இவரும், பிரபாகரனும் காதலித்து, கடந்த 13-3-2019 அன்று திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் ஆஷா தன்னுடைய கணவரின் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் ஆஷா தனது வீட்டின் பின்புறம் உள்ள நெல்லிக்காய் மரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தொங்கினார்.

இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே ஆஷாவை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதற்கிடையே ஆஷாவின் தாயார் சரசுவதி, தன்னுடைய மகளின் சாவில் மர்மம் இருப்பதாக, திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 5 மாதத்தில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததால், திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்