நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் போராட்டம்

நெல்லை மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-08-27 21:30 GMT
நெல்லை, 

தமிழகத்தில் அரசு டாக்டர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது, தமிழக அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க வேண்டும். உயர் மருத்துவ கல்வியில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் பெரும்பாலான டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதேபோல் அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்களும் பணியை புறக்கணித்தனர். இதையொட்டி ஒருசில இடங்களில் மட்டும் நோயாளிகள் சிகிச்சை பெறமுடியாமல் சிரமப்பட்டனர். ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாததால் அங்கு வந்த நோயாளிகளுக்கு நர்சுகள் சிகிச்சை அளித்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நேற்று மதியம் பட்டமேற்படிப்பு மாணவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்