அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை டிராபிக் ராமசாமி அகற்ற முயற்சி ஒரத்தநாட்டில் பரபரப்பு

ஒரத்தநாட்டில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை டிராபிக் ராமசாமி அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2019-08-27 23:00 GMT
ஒரத்தநாடு,

மக்கள் பாதுகாப்பு கழக தலைவரும், சமூக சேவகருமான டிராபிக்ராமசாமி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வந்தார். நேற்று மதியம் டிராபிக் ராமசாமி தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இவர் ஒரத்தநாடு பெரியார் சிலை அருகே சென்றபோது திடீரென காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அங்கு சாலையோரத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த ஒரு அரசியல் கட்சியின் விளம்பர பேனர்களை அகற்ற முயன்றார். இதற்கு அந்த பேனரை வைத்திருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஒரத்தநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) ராஜேஷ்கண்ணன் உள்ளிட்ட போலீசார் டிராபிக் ராமசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனால் விளம்பர பேனர்களை அகற்றினால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன் என்று டிராபிக் ராமசாமி போலீசாரிடம் கூறினார். இதனால் போலீசார் சிலர் உதவியுடன் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து டிராபிக் ராமசாமி அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் நேற்று ஒரத்தநாட்டில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்