அமலாக்கத்துறை அலுவலக பெயர் பலகை மராத்தியிலும் இருக்க வேண்டும் மாநகராட்சிக்கு, நவநிர்மாண் சேனா கடிதம்

அமலாக்கத்துறை அலுவலக பெயர் பலகை மராத்தியிலும் இருக்க வேண்டும் என மும்பை மாநகராட்சிக்கு நவநிர்மாண் சேனா கடிதம் எழுதி உள்ளது.

Update: 2019-08-27 23:30 GMT
மும்பை,

கோகினூர் கட்டுமான நிறுவனம் கடன் பெற்றதில் முறைகேடுகள் நடந்து உள்ளதாக வந்த புகார் குறித்து சமீபத்தில் அமலாக்கத்துறை அந்த நிறுவனத்தில் முன்பு பங்குதாரராக இருந்த நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரேயிடம் கடந்த 22-ந்தேதி விசாரணை நடத்தியது.

இதில், மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் ராஜ் தாக்கரேயிடம் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் நவநிர்மாண் சேனா கட்சி மும்பை மாநகராட்சி ‘ஏ' வார்டு அதிகாரியிடம் கடிதம் ஒன்றை அளித்து உள்ளது. அந்த கடிதத்தில், மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலக பெயர் பலகை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டு உள்ளது. மாநகராட்சி விதிகளின் படி மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலக பெயர் பலகை மராத்தி மொழியிலும் எழுதப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மும்பை மாநகராட்சி விதிகளின்படி மும்பையில் உள்ள கடைகளின் பெயர் பலகைகள் கட்டாயம் மராத்தியில் எழுதப்பட்டு இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்