மயிலம் அருகே பட்டப்பகலில் துணிகரம்: மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

மயிலம் அருகே பட்டப்பகலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-28 22:15 GMT
மயிலம்,

மயிலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி நீலாவதி(வயது 68). இவர் நேற்று காலை 11 மணியளவில் மயிலம்-கிளியனூர் சாலையில் உள்ள தனக்கு சொந்தமான வயலில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மூடியபடி வந்த மர்மநபர்கள் 2 பேர் நீலாவதியிடம் சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அதற்கு அவர் தண்ணீர் இல்லை என்று கூறினார்.

இதையடுத்து மர்மநபர்களில் ஒருவர் திடீரென நீலாவதியை வாயை பொத்திக் கொண்டார். மற்றொருவர் அவரது காதில் இருந்த அரை பவுன் கம்மல்கள், தாலி கயிற்றில் இருந்த 2 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டனர். பறிபோன நகைகளின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.

மர்மநபர்கள் நகைகளை பறித்ததில் காதுகளில் பலத்த காயமடைந்த நீலாவதி திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதைகேட்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, நீலாவதியிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர்கள் 2 பேர் பட்டப்பகலில் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்