வெவ்வேறு விபத்துகளில்; இளம்பெண் உள்பட 2 பேர் சாவு

ஓசூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் இளம்பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2019-08-28 22:30 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசபள்ளியை சேர்ந்தவர் நர்த்தனா (வயது 21). நாகொண்டபள்ளியை சேர்ந்தவர் ஆசா (21). இவர்கள் இருவரும் ஓசூர்-பெங்களூரு செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் ஓசூர் பாலாஜி நகரை சேர்ந்த பிரசாத் (32) என்பவர் வந்து கொண்டிருந்தார்.

அந்த நேரம் திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் எதிர்பாராதவிதமாக நர்த்தனா மற்றும் ஆசா ஆகியோர் மீது மோதியது. இதில், நர்த்தனா, ஆசா, பிரசாத் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இதில் நர்த்தனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஆசா, பிரசாத் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் நல்லூர் சாலையை சேர்ந்தவர் ரமேஷ் (34). கார் டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் ஓசூர் ரிங்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் அவர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில், ரமேஷ் பலத்த காயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்