வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை-ரூ.20 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-08-31 22:15 GMT
கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி தேவர்கண்ட நல்லூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் குமுதா(வயது55). இவருடைய கணவர் தியாக ராஜன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களின் மகன் ராஜ்குமார் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

இதனால் வீட்டில் ராஜ் குமார் மனைவி ஆர்த்தியும், குமுதாவும் வசித்து வந்தனர். தற்போது ராஜ்குமார் ஊருக்கு வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆர்த்தியை பிரசவத்துக்கு திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். இதனால் மருத்துவமனையில் ராஜ்குமாரும், குமுதாவும் தங்கி இருந்தனர்.

நகை-பணம் கொள்ளை

நேற்று அதிகாலை ராஜ் குமார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள சுவற்றில் இருந்த சிமெண்டு ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததையும், பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ராஜ்குமார், கொரடாச்சேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்