மின்சாரம் தாக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் உதவித்தொகை - அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

மின்சாரம் தாக்கி பலியான குடும்பத்திற்கு ரூ.8 லட்சம் உதவித் தொகையை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

Update: 2019-09-01 22:15 GMT
சிவகங்கை,

சிவகங்கையை அடுத்துள்ள கல்லல் சொக்கநாதபுரம் முத்துபட்டிணத்தை சேர்ந்தவர் லெட்சுமணன். இவருடைய மனைவி சரண்யா (வயது 35), மாமியார் தெய்வானை (60). லெட்சுமணன் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் மாமியாரும், மருமகளும் மட்டும் இருந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த மாதம் பெய்த மழையால் அந்த பகுதியில் சென்ற மின்கம்பி அறுந்து விழுந்திருந்தது.

இந்தநிலையில் சரண்யா வீட்டின் பின்புறம் சென்றார். அப்போது அவர் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்கத் தவறி மின்கம்பியை மிதித்து விட்டார். உடனே அவரை மின்சாரம் தாக்கியது. அதில் அலறிய அவரது சத்தம் கேட்டு மாமியார் தெய்வானை வேகமாக ஓடி வந்து மருமகளை காப்பாற்ற நினைத்து அவரின் கையை பிடித்து இழுத்தார். அதில் அவரையும் மின்சாரம் தாக்கியது. சம்பவ இடத்திலேயே மாமியாரும், மருமகளும் பரிதாபமாக பலியானார்கள்.

இதையொட்டி இறந்தவர்களின் குடும்பத்திற்கு இயற்கை இடர்பாடு நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையை பலியானவர்களின் குடும்பத்திற்கு அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்

நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயகாந்தன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வகுமாரி, தாசில்தார் கண்ணன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்