திருவெண்ணெய்நல்லூர் அருகே, வீடு புகுந்து நகை- பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய் நல்லூர் அருகே வீடு புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-02 22:00 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள வளையாம்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). இவர் சென்னையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கல்பனா (28). இவர்களுக்கு கனிஷ்கா (4) என்ற குழந்தை உள்ளது. கல்பனா வீடும், அவரது தந்தை சீனிவாசன் வீடும் அடுத்தடுத்து உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கமலக்கண்ணன் சென்னையில் இருந்ததால் கல்பனா தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார். கல்பனாவிற்கு துணையாக அவரது தாய் சரோஜா (58) வீட்டில் இருந்தார். இவர்கள் 3 பேரும் இரவு படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், வீட்டின் முன்பக்க கதவு தாழ்பாளை நெம்பி திறந்து உள்ளே புகுந்தனர். இவர்கள் அங்கிருந்த பீரோவை கள்ளச்சாவி மூலம் திறந்து அதில் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அங்குள்ள படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த கல்பனா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை அந்த மர்ம நபர்கள் பறித்தனர். இதையறிந்ததும் கல்பனா எழுந்து திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்