நெல்லையில், பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது

நெல்லையில் பழிக்குப்பழியாக ஒருவரை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-02 22:15 GMT
நெல்லை,

நெல்லை தெற்கு புறவழிச்சாலை ரோட்டில் வீரமாணிக்கபுரம் பகுதியில் ரவுடிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் பர்னபாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அந்த வீட்டில் சோதனை நடத்தி அரிவாள், கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்த மணிகண்டன் (வயது 35), முன்னீர்பள்ளத்தை சேர்ந்த அனைந்தபெருமாள், கட்டுடையார் குடியிருப்பை சேர்ந்த இசக்கிமுத்து, பக்கப்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி என்பது தெரியவந்தது. இதில் மணிகண்டன் மீது போலீஸ் வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் பாளையங்கோட்டையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்துக்கு பழிக்குப்பழியாக மற்றொரு பிரிவை சேர்ந்தவர்களை கொலை செய்ய ரகசிய திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்