ரவுடி கொலையில் மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடியில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-02 22:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாதாநகரை சேர்ந்தவர் சரவணன் என்ற சிந்தா சரவணன் (வயது 36). இவர் தூத்துக்குடி கே.வி.கே. நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.வி.கே.நகரில் வீட்டில் இருந்த சரவணனை 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாளையங்கோட்டையை சேர்ந்த மகாராஜன் (30), தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6-வது தெருவை சேர்ந்த ஜான்சன் (43) ஆகியோரை கைது செய்து இருந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த வடிவேல் (37), மீளவிட்டானை சேர்ந்த பாலசிங் (39) ஆகிய 2 பேரும் சிவகாசி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நெல்லை பழைய பேட்டையை சேர்ந்த மாடசாமி மகன் மொட்டைசாமி (25) என்பவரை தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முனியசாமி என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்