சிவகங்கையில் அனுமதியின்றி வைத்த விநாயகர் சிலையை அகற்ற முயன்றதால் போலீசார்- பா.ஜ.க.வினர் மோதல் - சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

சிவகங்கையில் அனுமதியின்றி வைத்த விநாயகர் சிலையை அகற்ற முயன்ற போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2019-09-03 22:45 GMT
சிவகங்கை,

சிவகங்கை நகரில், தொண்டி ரோட்டில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நேற்று முன்தினம் 3 அடி உயர மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை திடீரென வைக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த சிவகங்கை நகர் போலீசார் அங்கு வந்து அனுமதியின்றி சிலை வைக்கப்பட்டதாக கூறி சிலையை எடுக்க முயன்றனர். இதையறிந்த பா.ஜனதாவினர் மாவட்ட செயலாளர் உதயா தலைமையில் அங்கு வந்து சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலின் போது, பா.ஜனதா நிர்வாகிகள் உதயா மற்றும் சதீஷ்குமார் ஆகியோரை போலீசார் தாக்கினராம்.

இதை கண்டித்து பா.ஜனதா மாவட்ட தலைவர் சொக்கலிங்கம் தலைமையில், நகர் தலைவர் தனசேகரன், இளைஞர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ராமபிரபு, மாவட்ட செயலாளர் நாகேஸ்வரன், நகர் துணை தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் தொண்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார், மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் மாவட்ட செயலாளர் உதயா, சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தன்னை தாக்கியதாக புகார் கூறியதை தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்தை ஆயுதப்படைக்கு இடமாற்றி போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் உள்பட 3 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில் காயம் அடைந்த சதீஷ்குமாருக்கு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா பார்த்து நலம் விசாரித்தார்.

மேலும் செய்திகள்