தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது ரெயில் வந்ததால் தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்த மூதாட்டி

கலபுரகி மாவட்டம் சித்தாபுரா டவுன் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் முனிபாய் (வயது 62). இவர் நேற்று முன்தினம் சித்தாபுரா ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

Update: 2019-09-03 23:36 GMT
கலபுரகி , 

 சரக்கு ரெயில் ஒன்று தண்டவாளத்தில் வந்தது. இந்த வேளையில் முனிபாய் பிளாட்பாரத்தில் இருந்து இறங்கி ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால் சரக்கு ரெயில் வேகமாக வருவதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதை பார்த்தவுடன் பிளாட்பாரத்தில் நின்ற பயணிகளும் கூச்சலிட்டனர். 

அப்போது திடீரென்று தண்டவாளத்தில் முனிபாய் படுத்தார். இதனால் ரெயில் அவர் மீது மோதவில்லை. அதாவது தண்டவாளத்துக்கும் ரெயிலின் கீழ்பகுதிக்கும் இடையே இருந்த இடைவெளியில் முனிபாய் படுத்து கிடந்தார். பிறகு ரெயில் சென்றபிறகு முனிபாய் தண்டவாளத்தில் இருந்து எழுந்தார். அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும் அவர் சாவின் விளிம்புக்கு சென்று வந்ததாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள். 

அத்துடன், ரெயில் வருவதை அறிந்து முனிபாய் உடனடியாக யோசித்து தண்டவாளத்தில் படுத்து உயிர் பிழைத்ததை அங்கிருந்தவர்கள் பாராட்டினார்கள். இதை அங்கு இருந்தவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. 

மேலும் செய்திகள்