அரசு பஸ்களில் ஏற்ற மறுத்தால் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் - அதிகாரிகள் தகவல்

மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் பயணிகளை ஏற்ற மறுக்கும் ஊழியர்கள் மீது மானாமதுரை பஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2019-09-04 22:30 GMT
மானாமதுரை,

மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை வழியாக கமுதி, முதுகுளத்துார், ராமேசுவரம், ராமநாதபுரம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மதுரை, நெல்லை, ஈரோடு, சேலம், காரைக்குடி கோட்டங்கள் சார்பில் ஏராளமான அரசு பஸ்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.

ஆனால் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் மானாமதுரை பயணிகளை போக்குவரத்து கழக ஊழியர்கள் பஸ்களில் ஏற அனுமதிப்பதில்லை, மீறி வாக்குவாதம் செய்தால் பஸ் கிளம்பும் போது ஏறி கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். இதனால் மானாமதுரை பயணிகள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் பலரும் இந்த பிரச்சினை குறித்து பேசினர்.

அதற்கு பதிலளித்த போக்குவரத்து கழக மேலாளர் அழகர்சாமி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் பயணிகளை ஏற்ற மறுக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனாலும் மானாமதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுப்பது தொடர்கதையாகி வருகிறது. பல பஸ்கள் திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஊருக்குள் வராமல் பைபாஸ் ரோட்டிலேயே சென்றுவிடுகின்றன.

பள்ளப்பட்டி முதல் ஏர்வாடி தர்கா, குமுளி முதல் ஏர்வாடி வரை செல்லும் பஸ்கள் கடந்த ஒரு மாத காலமாக மானாமதுரை நகருக்குள் வருவதில்லை. தொடர் புகார் காரணமாக போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் பயணிகளை ஏற்ற மறுக்கும் அரசு பஸ்களின் நம்பர், நேரம் விவரங்களை மானாமதுரை பஸ்நிலையத்தில் உள்ள டிக்கெட் பரிசோதகர்களிடம் எழுத்து பூர்வமாக புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்