மன்னார்குடியில், ரூ.40 ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
மன்னார்குடியில் ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மன்னார்குடி,
மன்னார்குடி பெரியக்கடைத்தெருவில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மன்னார்குடி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் உத்தரவின் பேரில் நகர் நல அலுவலர் டாக்டர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன் பிரபாகரன், நகரமைப்பு ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடையில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், தட்டு, டீ கப் என ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவைகளை வாகனத்தில் ஏற்றி நகராட்சி குப்பை கிடங்குக்கு அழிப்பதற்காக கொண்டு சென்றனர்.
அப்போது நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளங்கோவன் கூறியதாவது:-
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை விற்பனை செய்வது தொடர்ந்தால், நகராட்சி நிர்வாகத்தின் மூலம் அபராதம் மற்றும் கடைக்கான விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.