கணவன்-மனைவிக்கு கத்தியால் வெட்டு 8 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

செங்குன்றத்தில் கணவன்-மனைவியை பட்டாகத்தியால் வெட்டிய சம்பவத்தில் 8 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-09-06 22:00 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்குட்பட்ட எடப்பாளையம் திருவள்ளூர் நெடுஞ்சாலையை சேர்ந்தவர் பவுன் (வயது 52). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி லதா (48). இவர்களுக்கு திருமணமான உமா, புனிதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் தனது மகள்களில் ஒருவரான உமாவை, எடப்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன்(32) என்பவர் கூட்டிச்சென்று குடும்பம் நடத்தியதாக தெரிகிறது. இது தொடர்பாக மணிகண்டனுக்கும் பவுனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
நேற்றுமுன்தினம் இரவு இருவருக்கும் ஏற்பட்ட தகராறு முற்றியதில், மணிகண்டன் தனது நண்பர்களான அஜய், சரவணன், உமாபதி, உள்ளிட்ட 8 பேரையும் பவுனின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பட்டாகத்திகளால் அவரது தலை, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பவுன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். இதை தடுக்க சென்ற மாமியார் லதாவையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் அவருக்கும் கையில் பலத்த வெட்டு விழுந்தது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்குப் பதிவு பதிவு செய்து தலை மறைவான வாலிபர் மணிகண்டன் உள்ளிட்ட 8 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்