கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது

கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 600 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-09-07 22:30 GMT
நாகர்கோவில்,

ராஜாக்கமங்கலம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் போலீசார் சுரேஷ்குமார், கோபகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ராஜாக்கமங்கலம் சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் ஒரு சொகுசு கார் வந்தது. உடனே காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் கார் நிற்கவில்லை. போலீசாரை பார்த்ததும் கார் வேகமாக சென்றது.

இதைத் தொடர்ந்து போலீசார் தங்களது வாகனத்தில் துரத்தி சென்று சொகுசு காரை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அதில் 600 கிலோ ரேஷன் அரிசி சிறு, சிறு மூடையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்து, கோணத்தில் உள்ள அரசு குடோனில் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காரை ஓட்டி வந்த திருவனந்தபுரம் மயிலக்கரையை சேர்ந்த அருண் (வயது 32) மற்றும் உடன் வந்த ஸ்ரீகுட்டன் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அருண் தனது காரில் கிழங்கு உள்ளிட்ட பொருட்களை ராஜாக்கமங்கலம் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வருவார்.

அவருக்கு உதவியாக ஸ்ரீகுட்டனும் வந்துள்ளார். பொருட்களை விற்ற பிறகு ஒவ்வொரு வீடாக சென்று ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, கேரளாவுக்கு கடத்தி, விற்றதும், மேலும் அருணும், ஸ்ரீகுட்டனும் ஏற்கனவே ஒரு முறை ரேஷன் அரிசி மூடைகளை கடத்தியுள்ளனர். தற்போது 2-வது முறையாக கடத்த முயன்றபோது பிடிபட்டதும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்