பழனி அருகே சோகம்: சண்முக நதியில் குளித்த 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலி

பழனி அருகே சண்முகநதியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-09-08 22:45 GMT
கீரனூர்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் வடக்குதெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 40). அவருடைய மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு தனிஷ்கா, விஜயசித்தார்த் என்ற 2 குழந்தைகள் உள்ளனர். பொன்னுச்சாமி, திருப்பூர் ஸ்ரீநகரில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்து தனியார் பனியன் நிறுவனத்தில் கூலிவேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் தனது குழந்தைகளின் காதணி விழாவை, பழனி அருகே மானூர் சண்முகநதி ஆற்றங்கரையோரத்தில் உள்ள சங்கர்-பொன்னர் கோவிலில் நேற்று நடத்த முடிவு செய்திருந்தார். இதற்காக அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

காதணி விழாவில் பங்கேற்க வெளியூரில் இருந்து அவரின் உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர். நேற்று காலை 6 மணி அளவில் பொன்னுச்சாமி, தனது உறவினரான கோவை புலியகுளத்தை சேர்ந்த ரமேஷ் மகன் சர்வேஷ்குமார் (19) என்பவரை அழைத்து கொண்டு மானூர் சண்முகநதியில் குளிக்க சென்றார்.

சண்முகநதியில் தேங்கியிருந்த தண்ணீரில் 2 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சர்வேஷ்குமார் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்தார். இதைக்கண்ட பொன்னுச்சாமி அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது பொன்னுச்சாமியும் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டார். சிறிதுநேரத்தில், தண்ணீரில் மூழ்கிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதற்கிடையே ஆற்றில் குளிக்க சென்ற 2 பேரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவர்களை தேடி உறவினர்கள் சண்முகநதிக்கு சென்றனர். அப்போது சர்வேஷ்குமார் தண்ணீரில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், பொன்னுச்சாமியின் உடலை தேடினர். ஆனால் அவரது உடல் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கீரனூர் போலீஸ் மற்றும் பழனி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொன்னுச்சாமியின் உடலை தேடினர். அங்குள்ள பாறை இடுக்கில் சிக்கியிருந்த பொன்னுச்சாமியின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

2 பேரின் உடல்களை பார்த்து அங்கிருந்த பொன்னுச்சாமியின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இதற்கிடையே 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதணி விழா நடக்க இருந்த நாளில், தண்ணீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்