விருதுநகரில் கல்வி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது

விருதுநகரில் கல்வி அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-09-08 22:15 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கண்காணிப்பாளராக இருப்பவர் கோவிந்தராஜ்(வயது54). இவர் விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி குறிஞ்சி நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா நந்திரெட்டியபட்டி அரசு பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.

கணவன் -மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிந்த நிலையில் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து மர்ம நபர் உள்ளே புகுந்தான். பீரோவில் இருந்த 38 பவுன் நகை மற்றும் ரூ.83 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு ஓடி விட்டான்.

மாலையில் வீடு திரும்பிய தம்பதியினர் இதுகுறித்து பாண்டியன்நகர் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சம்பவம் நடந்த போது அவர்களது வீட்டில் முன்பு நீண்ட நேரம் ஒரு மோட்டார் சைக்கிள் நின்றிருந்தது தெரியவந்தது.

அதனடிப்படையில் விசாரித்ததில் அது பெரிய பேராலி கிராமத்தை சேர்ந்த கார்த்திக்(32) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.

இதனை தொடர்ந்து கார்த்திக்கை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர் வீடுபுகுந்து கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து 38 பவுன் நகை மீட்கப்பட்டது. கார்த்திக் வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளாரா என்று தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்