மின்வசதி செய்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் பெண் தர்ணா - நாகையில் பரபரப்பு

மின்வசதி செய்து தரக்கோரி நாகை கலெக்டர் அலுவலகத்தில் தாயுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-09-09 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நாகை மாவட்டம் செம்பகராயநல்லூர் அருகே தென்னம்புலம் மடத்துத்தெற்கு காட்டை சேர்ந்த செந்தில்குமார் மனைவி கோகிலா (வயது 45) என்பவர் தனது தாய் லட்சுமியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு தான் கொண்டு வந்த கோரிக்கைகள் எழுதிய பதாகையை கையில் ஏந்தியபடி தனது தாயுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அருகில் இருந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வசதி இல்லை. இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிக்கள் வீட்டுக்குள் புகுந்து கடித்து விடுமோ? என்ற அச்சத்தில் தினமும் இருந்து வருகிறோம்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், உங்கள் வீடு சாலையை விட்டு ஒதுக்குப்புறமாக உள்ளது. இதனால் உங்களது வீட்டுக்கு மின்வசதி செய்து கொடுக்க முடியாது என காரணங்களை கூறி வருகின்றனர். இதுசம்பந்தமாக பல்வேறு முறை குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே பல ஆண்டுகளாக இருளில் மூழ்கி கிடக்கும் எங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என்று அவர் கூறினார். மின் வசதி செய்து தரக்கோரி பெண் ஒருவர் தனது தாயுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்