ஆண்டிமடம் அருகே, குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழங்கால நாணயங்கள்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே குளத்தை தூர்வாரும் போது பழங்கால நாணயங்கள் கிடைத்தது.

Update: 2019-09-09 21:45 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே உள்ள அகரம் கிராமத்தில் நந்ததேவன் என்கிற குளம் உள்ளது. இந்த குளம் பொதுமக்களால் நீண்டநாட்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது அனைத்து ஏரி, குளங்களை தூர்வாரி வரும் நிலையில் அரசு சார்பில் இந்த குளத்தை தூர்வாருவதற்காக ஒப்பந்ததாரர் ஆளநாகராஜன் என்பவர் பொக்லைன் எந்திரங்கள் வைத்து கடந்த 3 நாட்களாக தூர்வாரி கொண்டிருந்தார்.

நேற்று தூர்வாரிய மண்ணை டிராக்டரில் வைத்து மற்றொரு இடத்தில் கொட்டியபோது, பழங்காலத்து செப்பு நாணயங்கள் சிதறி கீழே விழுந்தன. இதனை பார்த்த அங்கு கூடியிருந்த சிறுவர்கள் அவற்றை எடுத்து பார்த்தனர். இதை கண்ட ஆளநாகராஜன் இதுகுறித்து அகரம் கிராம நிர்வாக அதிகாரி அருணுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி சிதைந்து கிடந்த மண்பானை மற்றும் பழங்கால 200-க்கும் மேற்பட்ட செப்பு நாணயங்களை கைப்பற்றி ஆண்டிமடம் தாசில்தார் குமாரைய்யாவிடம் ஒப்படைத்தார். மேலும் அந்த செப்பு நாணயங்கள் சோழர் காலத்து நாணயங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்