பஸ் கூண்டு கட்டியதற்கான தொகையை வழங்காமல் ரூ.8½ லட்சம் மோசடி, தந்தை-மகன்கள் மீது வழக்குப்பதிவு

கரூரில் பஸ் கூண்டு கட்டியதற்கான தொகையை வழங்காமல் ரூ.8½ லட்சம் மோசடி செய்த தந்தை-மகன்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-09 21:45 GMT
கரூர்,

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 49). இவர் அதே பகுதியில் பஸ் கூண்டு கட்டும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கரூர் கோர்ட்டில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண் 1-ல் கண்ணன் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (65). இவரது மகன்கள் ஆனந்த், அகிலன். தந்தை, மகன்கள் 3 பேரும் எங்களிடம் 3 பஸ்களுக்கு கூண்டு கட்ட ஒப்பந்தம் செய்தனர். ஒரு பஸ்சுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வீதம் ரூ.22½ லட்சம் தொகை பேசப்பட்டது. இதில் ரூ.14 லட்சத்தை ராஜகோபாலும், அவரது மகன்களும் வழங்கினர். மீதமுள்ள ரூ.8½ லட்சத்தை தராமல் மோசடி செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெரிவித்திருந்தார். இது குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து நாகர்கோவிலை சேர்ந்த ராஜகோபால், அவரது மகன்கள் ஆனந்த், அகிலன் ஆகிய 3 பேரும் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறுகையில், தந்தை-மகன்கள் சேர்ந்து நாகர்கோவிலில் பஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்