குடிபோதையில் தகராறு: தொழிலாளியை அடித்து கொன்ற நண்பர்கள் 3 பேர் கைது

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை அடித்து கொன்ற நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-09 22:15 GMT
க.பரமத்தி,

கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 38). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் மது குடிக்க மலைச்சூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு டாஸ்மாக் கடை அருகே அமர்ந்து தண்டபாணி மது குடித்தார்.

அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறானது. அப்போது தண்டபாணியை அவரது நண்பர்கள் அங்கு கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் தண்டபாணி பலத்த காயமடைந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் சின்னதாராபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து தண்டபாணியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சின்னதாரா புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளியை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினரின் விசாரணையில், தண்டபாணியை அவரது நண்பர்களான சின்னதாராபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாயாண்டி என்கிற மாயகிருஷ்ணன் (38), அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி (54), எலவனூரை சேர்ந்த வேல்முருகன் (40) ஆகியோர் சேர்ந்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்