கோவில்பட்டியில் விபத்து: துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலி மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியது

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலியானார்.

Update: 2019-09-10 22:30 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலியானார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டவர்மங்கலம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்தவர் காசிராஜ் (வயது 50). இவர் விளாத்திகுளம் யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலையில் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

பின்னர் இரவில் வேலை முடிந்ததும், காசிராஜ் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அவர் இரவு 8 மணியளவில் கோவில்பட்டி தெற்கு திட்டங்குளத்தை கடந்து சென்று கொண்டிருந்தார்.

கன்டெய்னர் லாரி மோதியது

அப்போது அங்கு சாலையோரம் பஞ்சராகி நின்ற கன்டெய்னர் லாரியின் டயரை டிரைவர் கழற்றி விட்டு, மாற்று டயரை பொருத்தி, அந்த கன்டெய்னர் லாரியை பின்னோக்கி இயக்கி வந்தார். அப்போது அந்த வழியாக காசிராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த காசிராஜை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிரைவர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில், கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதேசன் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி டிரைவரான விருதுநகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காளிராஜை (32) கைது செய்தார்.

விபத்தில் இறந்த காசிராஜிக்கு பெரிய சமுத்திரகனி என்ற மனைவியும், பரணிகுமாரி, முகிலரசி ஆகிய 2 மகள்களும், அருண் பிரசாத் என்ற மகனும் உள்ளனர்.

மேலும் செய்திகள்